Friday, August 17, 2012

கீழக்கரையில் மாசி ஊறுகாய் தயாரிப்பில் முன்னோடி - வெள்ளி விழாவை நோக்கி 'S .M. மாசிக் கடை' !

கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லீம் பஜாரில் 'S.M. மாசிக் கடை' என்ற பெயரில் ஊறுகாய் சிறப்பங்காடியினை, பருத்திக்காரத் தெருவைச் சேர்ந்த S.M.கலீல் ரஹ்மான் அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி, நார்த்தங்காய் என்று விதவிதமான சைவ ஊறுகாய்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் வாங்கி ருசிக்கும் ஊறுகாய்களின் சுவையில் சொக்கி நிற்பவர்கள் ஏராளம்.

இங்கு எங்கும் கிடைக்காத இறால், மாசி, நெய் மீன், நெத்திலி மீன் போன்ற அசைவ ஊறுகாய் வகைகளுக்கும் பஞ்சமில்லை. கீழக்கரை தொதல், சீப் பணியத்திற்கு அடுத்தபடியாக இப்போது மீன் ஊறுகாய்களும் பிரபலமாகி வருகிறது. வளைகுடா நாடுகளின் அரபுக்களின் விருப்பப் பட்டியலில் தற்போது இந்த அசைவ ஊறுகாய்களும் இடம் பெற்று விட்டது. வெளி நாட்டில் வசிக்கும் நம் கீழக்கரைவாசிகள், ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும் போதும், இந்த அரபு மக்களுக்கு மீன் ஊறுகாய்களை வாங்கி செல்லாமல் இருப்பது இல்லை.


இது குறித்து S.M.கலீல் ரஹ்மான் அவர்களிடம் கேட்ட போது "நாங்கள் தயாரிக்கும் அனைத்து அசைவ ஊறுகாய்களும் மூன்று மாதம் வரை கெடாது என்றாலும், மூன்றே நாளில் காலியாகி விடுவதே, எங்கள் ஊறுகாயின் இரகசியம். ஒரு கிலோ இறால், நெய் மீன், நெத்திலி ஊறுகாய்களுக்கு ரூ.550க்கும் மற்றும் மாசி ஊறுகாய் ரூ.600க்கும் விற்கப்படுகிறது. ஏற்றுமதி தரத்தில் உள்ள மீன்களை மட்டுமே, ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

மாசி ஊறுகாய்க்கு வெளி நாட்டில் அமோக வரவேற்பு உள்ளது. விரைவில் கணவாய், நண்டு ஊறுகாய்களை அறிமுகப் படுத்த உள்ளோம். மேலும் எங்களிடம் கணவாய் கருவாடு, மாசி மசாலா மிக்ஸ், நெத்திலி கருவாடு பொரியல் போன்றவைகள் நியாயமான விலையில் தர மிகுதியோடு கிடைக்கும். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளி விழாவை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும், எங்கள் விற்பனயகத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

தொடர்புக்கு :  S.M.கலீல் ரஹ்மான் - 9597042523

No comments:

Post a Comment